திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்


திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 28 May 2021 10:58 PM GMT (Updated: 28 May 2021 10:58 PM GMT)

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார்.

சென்னை,

நாடோடிகள் படத்தின் நடிகை சாந்தினி நேற்று பகல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் அவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னை பெசன்ட் நகரில் வசிக்கிறேன். மலேசிய நாட்டின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது அடிக்கடி நான் சென்னை வருவேன். அந்த நேரத்தில் அதாவது 2017-ம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவர் அடிக்கடி என்னுடன் செல்போனில் பேசுவார். திடீரென்று என்னை விரும்புவதாக தெரிவித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

கணவன்-மனைவியாக....

அவரது உறுதியை ஏற்று நான் அவருடன் உறவுக்கு சம்மதித்தேன். இருவரும் கணவன்-மனைவிபோல வாழ்ந்தோம். சென்னைக்கு வந்தால் அவர் என்னுடன்தான் தங்குவார். அவரது காரில், அவரது மனைவிபோல நான் வலம் வந்தேன்.

பல இடங்களுக்கு அவருடைய மனைவி என்ற உரிமையுடன், அவரோடு ஒன்றாக சுற்றி உள்ளேன். அவருடன் வாழ்ந்ததன் பலனாக 3 முறை நான் கர்ப்பம் தரித்தேன்.

அவரது நண்பரான டாக்டரின் மருத்துவமனைக்கு என்னை அனுப்பி கருவை கலைக்க சொன்னார். அதன்படி கருவை கலைத்தேன்.

ஏமாற்றினார்

முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னை திருமணம் செய்வதாக சொன்னார். இதற்கிடையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதனால் மன உளைச்சலுடன் இருப்பதாக ஒரு காரணத்தைச்சொல்லி 2-வது முறை திருமணம் வரை போய் ஏமாற்றினார்.

3-வது கொரோனாவை காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப்போட்டார்.

கொலை மிரட்டல்

இறுதியாக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு என்னை கை பிடிப்பதாக சொன்னார். அதுவும் நடக்கவில்லை. தற்போது திருமணம் செய்யுமாறு கேட்டால், கூலிப்படையை ஏவி என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அவர் எனக்கு தெரியாமல் ஆடை இல்லாமல் நான் இருந்த என்னுடைய ஆபாச படங்களை எடுத்து வைத்துள்ளார். அந்த படங்களை சமூகவலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக சொல்லி பயமுறுத்துகிறார்.

அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் வைத்திருக்கும் எனது சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை மீட்டுத்தர வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சாந்தினி தனது புகாரில் கூறப்பட்ட கருத்துகளை விளக்கி பின்னர் நிருபர்களுக்கு பேட்டியும் அளித்தார். மணிகண்டனுடன் ஒன்றாக அவர் இருக்கும் புகைப்படத்தையும், நடிகை சாந்தினிநிருபர்களிடம் வெளியிட்டார்.

Next Story