சென்னையில் வரும் 14-ம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த திட்டம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


சென்னையில் வரும் 14-ம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த திட்டம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 9 Jun 2021 8:42 AM GMT (Updated: 9 Jun 2021 8:42 AM GMT)

சென்னையில் வரும் 14-ம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி, டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான ஜெயக்குமார் இன்று மனு அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் பேசியவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் இல்லை. இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக எழுச்சியுடன் செயல்படுகிறது. இதே நிலைதான் தொடரும்.

அ.தி.மு.க.வுக்குப் பொதுச் செயலாளர் தேர்வு  100 சதவீதம் நடைபெறாது. நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் செயல்படுகிறது. இருவரும்தான் கட்சியை வழிநடத்துவர். நாங்கள்தான் அ.தி.மு.க. என சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கிறது. இரட்டை இலை எங்களிடம்தான் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்  சான்றிதழ் கொடுத்துவிட்டது.

இரட்டைத் தலைமையை தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொண்டதால் தான் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் 3 சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் வந்தது. அப்படியென்றால், எல்லோரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்.

தமிழகத்திற்குத் தடுப்பூசியை அதிகரிக்கக் கோரி  எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க. எதிர்க்கட்சியின்  கடமையைச் சரிவரச் செய்திருக்கிறார். தமிழகத்தின் பல இடங்களில் தடுப்பூசி இல்லை. சில இடங்களில் இரண்டு லட்சம் தடுப்பூசி போடுவதாகக் கூறுகின்றனர். ஆனால், எங்கு போட்டிருக்கின்றனர்?

39 எம்.பி.க்கள் எதற்கு வைத்திருக்கின்றனர்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காரியம் சாதிக்காமல் வெறுமனே கடிதம் எழுதுகின்றனர். கொரோனா குறைந்துவிட்டது என்கின்றனர். ஆனால், பரிசோதனை செய்தால்தானே கொரோனா தொற்று இருப்பது தெரியும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.


Next Story