பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது விபத்து - நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி


பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது விபத்து - நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 2:31 AM GMT (Updated: 10 Jun 2021 4:21 AM GMT)

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி. 23 வயதே ஆன நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். அங்கு உடனடியாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலெட்சுமி மற்றும் அவரது மாமியார் மற்றும் அவரது நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

ஆம்புலன்சை ஓட்டிவந்த டிரைவர் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகியோரும் ஆம்புலன்சில் பயணம் செய்து வந்துள்ளனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் ஏரிக்கரை அருகே வந்த போது ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இதில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலெட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த எஞ்சிய 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஜெயலெட்சுமியின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவத்திற்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றபோது விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story