தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வருகை


தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வருகை
x
தினத்தந்தி 10 Jun 2021 5:26 AM GMT (Updated: 10 Jun 2021 5:26 AM GMT)

தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் பல்வேறு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1,060 டோஸ் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திற்கு இன்று 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளது. இவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட உள்ளதால், பல்வேறு மையங்களில் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்கலாம் என தகவல் வெளியாக உள்ளது.

Next Story