கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு


கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 15 Jun 2021 12:39 AM GMT (Updated: 15 Jun 2021 12:39 AM GMT)

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை(புதன்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 6 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

கல்லணையில் தண்ணீர் திறப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை(புதன்கிழமை) அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

6 அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், 
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு பூஜைகள்
கல்லணை திறப்பு நிகழ்ச்சியின்போது கொள்ளிடம் ஆற்றின் உள்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் பூஜைகள் நடைபெறும். பின்னர் பொத்தானை அழுத்தி அமைச்சர்கள் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுவார்கள்.அதனைத்தொடர்ந்து வெண்ணாற்றிலும், கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட பின்பு கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பாலங்கள்
தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜூன் 16-ல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தண்ணீர் திறப்பையொட்டி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவோடு காட்சியளிக்கின்றன.மேலும் பாலத்தில் உள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜன், அகத்தியர், பொறியாளர் ஆர்தர் காட்டன், விவசாயி, மீன் பிடிக்கும் பெண், காவிரி அம்மன் சிலைகளில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து கல்லணை திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story