உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 24 Jun 2021 11:10 PM GMT (Updated: 24 Jun 2021 11:10 PM GMT)

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

மாவட்டங்கள் பிரிப்பு, வார்டு மறுவரையறை பணி போன்ற காரணங்களால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி உள்ளது.

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

துரைமுருகன் அறிவிப்பு

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 25-ந்தேதி (இன்று) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

9 மாவட்டங்கள் மட்டுமின்றி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலும் நடத்தப்படாமல் உள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுடன், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story