கணவருடன் தகராறு: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை


கணவருடன் தகராறு: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 4 July 2021 6:06 AM GMT (Updated: 4 July 2021 6:06 AM GMT)

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம், வரதன்கோன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி நித்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களின் மகள் நல்லகண்ணு (6), மகன் ரோகித் (4).

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நித்யா மணப்பாறை அருகே பொன்னம்பலத்தான் பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்ததோடு, தனியார் பஞ்சாலை ஒன்றுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

விஷம் கலந்த டீ

கடந்த 30-ந்தேதி கணவர் வீட்டுக்கு நித்யா சென்றார். அப்போதும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா மீண்டும் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில் மிகுந்த மனவேதனையுடன் இருந்த நித்யா, கடந்த 1-ந்தேதி காலை பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலிகளை கொல்ல பயன்படுத்தும் பசையை (விஷம்) டீயில் கலந்து தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்துவிட்டார்.

3 பேர் சாவு

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 3 பேரையும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில் நித்யா நேற்றுமுன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று அதிகாலை, அவருடைய மகன் ரோகித்தும், மகள் நல்லகண்ணும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நித்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது கணவர் மற்றும் கணவரின் அக்காள் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய மணப்பாறை போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story