மத்திய இணை மந்திரியான எல். முருகனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய இணை மந்திரியாக பதவியேற்ற எல். முருகனை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடந்தது. இதில் 43 பேர் இடம்பெற்றனர். புதிய மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய மந்திரிசபையில், புதிதாக 15 மந்திரிகள், 28 இணை மந்திரிகள் பதவியேற்று கொண்டனர். அவர்களில் இணை மந்திரியாக பொறுப்பேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகனும் ஒருவர். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நாகர்கோவில், கோவை தெற்கு, திருநெல்வேலி, மொடக்குறிச்சி என 4 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது.
இந்த தேர்தலில், தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவர் எல். முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எனினும், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. உறுப்பினர்கள் அவைக்கு செல்வதற்கு எல். முருகன் பெரும் பங்காற்றியுள்ளார். இதனை முன்னிட்டு அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின் தொலைபேசி வழியே எல். முருகனை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story