விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது


விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 12 July 2021 12:19 AM GMT (Updated: 12 July 2021 12:19 AM GMT)

சென்னையில் உள்ள வீட்டுக்கு திடீரென சென்று விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

சென்னை, 

பிரபல நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

உடல் நலக்குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போதும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பின்னர், கொரோனா பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டு, அதில் இருந்து விடுபட்டார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜயகாந்தும் தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, விஜயகாந்திடம் விரைவில் தங்களை நேரில் வந்து சந்திப்பேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சமீபத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்-அமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலினும் விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து சென்றார்.

இந்த நிலையில், நேற்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரிடம் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார். அப்போது, அங்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது, தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை விஜயகாந்த் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

Next Story