உறைகிணறு தோண்டிய போது மண்ணில் சிக்கிய தொழிலாளி - தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்பு


உறைகிணறு தோண்டிய போது மண்ணில் சிக்கிய தொழிலாளி - தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 20 July 2021 9:34 AM GMT (Updated: 20 July 2021 9:34 AM GMT)

உறைகிணறு தோண்டிய போது மண்ணில் சிக்கிய தொழிலாளியை தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி பகுதியில் புதிய வீடு கட்டுவதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 பேர் இந்த பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். 

அந்த வகையில் அந்த தொழிலாளர்கள் இன்று காலை 8.30 மணியளவில் தங்கள் பணியை துவங்கிய போது, ஒரு நபர் கழிவுநீர் தொட்டிக்காக உறைகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரைச் சுற்றியிருந்த மணல் முழுவதுமாக சரிந்து, அவரது கழுத்துவரை மூடியுள்ளது. 

இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்த சக தொழிலாளர்கள், அவர் மீதிருந்த மணலை அகற்ற முயன்ற போது இடுப்பிற்கு கீழ் உள்ள மணலை அகற்ற முடியாதவாறு மணல் இறுகியுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மணலில் சிக்கிய தொழிலாளியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story