சென்னையில் நடந்த கொடூர சம்பவம்: அறையில் அடைத்து வைத்து, 15 வயது நேபாள சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்


சென்னையில் நடந்த கொடூர சம்பவம்: அறையில் அடைத்து வைத்து, 15 வயது நேபாள சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 21 July 2021 8:11 PM GMT (Updated: 21 July 2021 8:11 PM GMT)

சென்னையில் தனி அறையில் அடைத்து வைத்து 15 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வங்கி காவலாளி உள்ளிட்ட 3 காமக்கொடூரர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

நேபாள நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி, சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 18-ந்தேதி மாலை வெளியில் சென்ற நேபாள சிறுமி திரும்பி வரவில்லை. மறுநாள் 19-ந் தேதியும் சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுமியின் தந்தை கே.கே.நகரில் வசிக்கிறார். சிறுமி காணாமல் போனது பற்றி அவரது தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் இது பற்றி கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் ராஜேந்திரன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

பாலியல் பலாத்காரம்

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமியை கே.கே.நகரில் உள்ள ஒரு அறையில் 2 நாட்கள் அடைத்து வைத்து 3 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தீர்த்து கட்டி விடுவோம் என்றும், உனது நிர்வாண படங்கள் செல்போனில் உள்ளது என்றும், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்றும் பயமுறுத்தி உள்ளனர். 3 காமக்கொடூரர்கள் செய்த காம விளையாட்டில் சிக்கி சின்னா பின்னமான நிலையில் சிறுமி வீடு திரும்பி வந்தாள்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் சொல்லி சிறுமி கதறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றினார்கள். கீழப்்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டாள்.

3 காமக்கொடூரர்கள் கைது

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரர்கள் யார், என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். முதலில் புருசோத்தமன் ஜனா (வயது 46) என்ற காவலாளியை போலீசார் பிடித்தனர். அவர் சிறுமிக்கு பழக்கமானவர். அவர்தான் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அவர் முதலில் சிறுமியை கற்பழித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு நெருக்கமான விக்னேஷ் (23), அருண்குமார் (24) ஆகிய மேலும் 2 பேர் கூட்டாக சேர்ந்து சிறுமியை 2 நாட்கள் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேற்கண்ட 3 காமக்கொடூரர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

அழகாக இருந்ததால்...

கைது செய்யப்பட்ட புருசோத்தமன் ஜனா, வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை செய்கிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். விக்னேஷ் தேனாம்பேட்டை நக்கீரன் நகரைச்சேர்ந்தவர். நிதிநிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அருண்குமார், ஆயிரம்விளக்கு, மக்கீஸ்கான் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இந்த கொடூர சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி அவரது காதலனை பார்க்க வந்தபோது, இரவு நீண்ட நேரம் ஆகி விட்டதால், புருசோத்தமன் வீட்டில் தங்கியதாகவும், சிறுமி பார்ப்பதற்கு 20 வயது பெண் போல அழகாக இருந்ததால், சபல புத்தியால் இந்த சம்பவம் நடந்து விட்டதாகவும், கைதானவர்கள் போலீஸ் விசாரணையில் கூறியதாக தெரிகிறது.

Next Story