மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை காரில் வந்த 6 பேர் கும்பல் வெறிச்செயல்


மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை காரில் வந்த 6 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 10 Sep 2021 10:12 PM GMT (Updated: 10 Sep 2021 10:12 PM GMT)

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி காரில் வந்த 6 மர்மநபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (வயது 43). வாணியம்பாடி முன்னாள் நகரசபை உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி) மாநில துணை செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் திடீரென காரில் இருந்து இறங்கி வசீம் அக்ரமை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் காரில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். போலீசார், பிரேத பரிசோதனைக்கு வசீம் அக்ரமின் உடலை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து அவர்கள் வாணியம்பாடி-வேலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூரில் இருந்து மீண்டும் கொண்டு வந்து வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என 1 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகள் அடைப்பு-பதற்றம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து வாணியம்பாடியில் பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட வசீம் அக்ரமுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

Next Story