மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்


மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்
x
தினத்தந்தி 12 Sep 2021 10:44 AM GMT (Updated: 12 Sep 2021 10:44 AM GMT)

தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

சென்னை,

இந்தியாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. 

இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யும் பணி மாவட்ட கலெக்டர்கள் மூலம் செய்யப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி போடாத மக்களை தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக தெருத்தெருவாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. செல்போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கப்பட்டிருந்தன.

இதனால் இன்று காலையில் தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும்போது ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் முதலுதவி சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட உதவிகள் செய்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் வந்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதனால் நிறைய முகாம்களில் காலையிலேயே கூட்டம் அதிகம் காணப்பட்டது. 

தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சென்னையை பொறுத்தவரை 1,600 சிறப்பு முகாம்களில் இன்று காலை 7 மணியில் இருந்தே தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.  சென்னையில் 600 டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 7000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சில இடங்களில் தடுப்பூசி போடும் மக்களுக்கு பரிசு பொருட்களும் அறிவிக்கப்பட்டன. இதனால், மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

Next Story