‘நீட்' தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை: மாணவர்கள் விபரீதமான முடிவை எடுக்க வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


‘நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை: மாணவர்கள் விபரீதமான முடிவை எடுக்க வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Sep 2021 5:46 PM GMT (Updated: 14 Sep 2021 6:11 PM GMT)

‘நீட்' தேர்வு முடிவு பயத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மாணவர்கள் விபரீதமான முடிவை எடுக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நீட்' தோல்வி பயத்தால் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் கருணாநிதியின் 2-வது மகள் மாணவி கனிமொழி, கடந்த 12-9-2021 அன்று 'நீட்' நுழைவுத் தேர்வினை எழுதிவிட்டு, தேர்வின் முடிவை எதிர்கொள்ள இயலாமல் நேற்று காலை தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும், சொல்லொண்ணா துயரமும் அடைந்தேன்.

மாணவி கனிமொழியை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். `வாழ்க்கை என்பது வாழ்வதற்கே’. பொதுவாக, மாணவச்செல்வங்களின் எதிர்கால கனவை, வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு பிளஸ்-2. இதன் பிறகுதான் மாணவர்கள், என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்வார்கள்.

பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும், மாணாக்கர்களுக்கு மருத்துவத்துறையின் பலதரப்பட்ட படிப்புகளை விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்று நான் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். மாணவச்செல்வங்களும், பிளஸ்-2 படிப்புக்கு பிறகு, மருத்துவம் தவிர, மருத்துவம் சார்ந்த படிப்பு என்று தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தற்கொலை முடிவு என்பது ஆபத்தானது. இதுபோன்ற எண்ணங்கள் மாணவச் செல்வங்களாகிய உங்கள் மனதில் ஏற்படும்போது, நீங்கள் எப்போதும் தனியாக இருக்காதீர்கள். உங்கள் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, உடன் பிறந்தோர் அருகிலோ எப்போதும் இருங்கள். உங்களை பிளஸ்-2 வரை படிக்கவைக்க, உங்களது பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், நீங்கள் இரவு, பகலாக விழித்திருந்து தேர்வு எழுதி வாங்கிய மதிப்பெண்களையும் மனதில் நிலை நிறுத்துங்கள்.

உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூருங்கள். உங்கள் நண்பர்களோடு நேரத்தை செலவழியுங்கள். உங்களது இந்த முடிவு - அந்த ஒரு வினாடி முடிவு - உங்களை விட்டு அகன்று விடும். அரியலூர் மாணவி கனிமொழியின் இழப்பே நீட்டுக்கான நமது கடைசி இழப்பாக இருக்கட்டும் என்று அனைத்து மாணவச்செல்வங்களையும் கைகூப்பி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. தனது அரசியல் நாடகத்தையும், ‘நீட்' பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.

தேவைப்படின் ‘நீட்' தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கு ஆசிரியப் பெருமக்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழு மூலம் சிறப்பு வகுப்பு ஒன்றினை நடத்தி, மாணவச்செல்வங்களின் மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்ப்பதோடு, ‘நீட்' நுழைவுத்தேர்வில் தோல்வியடைய நேர்ந்தால், மருத்துவம் தவிர மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகள் என்னென்ன, அதனால் என்ன பயன் என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்ல வையுங்கள்.

நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் சமயத்தில், பெற்றோர் எப்போதும் தங்களது மகன், மகள் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து, தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனிமேல், மாணவச்செல்வங்கள் இதுபோன்ற விபரீதமான முடிவை எடுக்க வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நீட் தேர்வே ரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற வேளையில், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் மாணவ-மாணவிகள் ஈடுபடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபரீத முடிவுகள் எடுப்பதை மாணவ-மாணவிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story