தமிழகத்தில் வருகிற 17ல் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்: மா. சுப்பிரமணியன்


தமிழகத்தில் வருகிற 17ல் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்:  மா. சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 14 Sep 2021 9:41 PM GMT (Updated: 14 Sep 2021 9:41 PM GMT)

தமிழகத்தில் வருகிற 17ந்தேதி மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,


தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் 58 லட்சத்து 54 ஆயிரத்து 130 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டன. அதன் பயனாக தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.  மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டன. அன்றைய தினம் ஒரேநாளில் 28 லட்சத்து 91,021 நபா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வருகிற அக்டோபா் 31ந்தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் வரும் 17ந்தேதி மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றாா்.

கையிருப்பில் 17 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும், கூடுதலாக தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வரும் எனவும் எதிா்ப்பாா்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.


Next Story