சிறுமியை அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய கொடூரம் கள்ளக்காதலனுடன் தாய் கைது


சிறுமியை அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய கொடூரம் கள்ளக்காதலனுடன் தாய் கைது
x
தினத்தந்தி 19 Sep 2021 10:07 PM GMT (Updated: 19 Sep 2021 10:07 PM GMT)

தஞ்சையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கோரிகுளம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 36). இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி முத்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்தமிழ்ச்செல்வி சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி(30). இவருக்கு வித்யா(7), விக்னேஷ்(4) என 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் 2 குழந்தைகளையும் விஜயலட்சுமி அழைத்து கொண்டு தஞ்சைக்கு வந்துவிட்டார். விஜயலட்சுமி பிளம்பர் வெற்றிவேலுக்கு தூரத்து உறவினர் ஆவார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தையொட்டி ஒரு கொட்டகையில் விஜயலட்சுமியையும், அவரது 2 குழந்தைகளையும் வெற்றிவேல் கடந்த 5 மாதங்களாக தங்க வைத்துள்ளார்.

உல்லாசத்திற்கு அழைப்பு

நேற்று முன்தினம் இரவு வெற்றிவேல் குடிபோதையில் விஜயலட்சுமி தங்கியுள்ள கொட்டகைக்கு சென்று அவரை உல்லாசத்துக்கு அழைத்தார். அப்போது சிறுவன் விக்னேஷ் தூங்கிவிட்டான். ஆனால் வித்யா விழித்து கொண்டு இருந்தாள். இதனால் விஜயலட்சுமி, வெற்றிவேலின் ஆசைக்கு இணங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல், விஜயலட்சுமியை தாக்கினார்.

தன் கண் எதிரே தாய் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி வித்யா, வாசலிலுக்கு சென்று காப்பாற்றும்படி சத்தம்போட்டாள். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல் சிறுமி வித்யாவை அடித்து கீழே தள்ளினார். இதில் சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே வெற்றிவேலும் விஜயலட்சுமியும் வித்யாவை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டது தெரிந்ததால் திரும்பி வீட்டுக்கு வந்து விட்டனர்.

ஆற்றில் உடல் வீச்சு

சிறுமியின் உடலை சுடுகாட்டில் புதைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் அதே பகுதியில் உள்ள புதுஆற்றில் சிறுமியின் உடலை வீசி எறிந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மக்கள் போலீசாருக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிறுமி வித்யாவின் உடலை புதுஆற்றில் வீசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெற்றிவேல், விஜயலட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். புதுஆற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. சிறுமியின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story