‘நீட்’ தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்


‘நீட்’ தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2021 10:21 PM GMT (Updated: 21 Sep 2021 10:21 PM GMT)

நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து பிரசாரம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராகவும், அதுபற்றி ஆலோசிக்கவும் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஊடக பிரிவுத்தலைவர் ஆ.கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

முழு ஆதரவு வழங்க வேண்டும்

* நீட் தேர்வு ஒழிப்புக்கான களம் காண, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு மாணவர்களின் மருத்துவக்கல்வி உரிமைக்காக போராட என்றும் ஆயத்தமாக உள்ளோம் என்பதால், தற்கொலை என்ற அவசர முடிவுக்கு வந்து பெற்றோர், உறவினர்களுக்கும், எங்களுக் கும் வேதனையை உருவாக்க வேண்டாம் என மாணவர் களை வேண்டிக்கேட்கிறோம்.

* நீட் தேர்வு குறித்து சட்டமசோதா இயற்றப்பட்டு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த முறையான சட்டப்படியான, தீர்க்கமான அணுகுமுறை அடிப்படையில் இச்சட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இக்கூட்டம் மனதார பாராட்டி, நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, ஜனாதிபதியின் இசைவினை பெற தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சரின் முயற்சிக்கும் தமிழக மக்கள் முழு ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

சமூக வலைதளங்களில் பிரசாரம்

* கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். நீட்டுக்கு எதிராக வெகுமக்களில் எழுச்சி கிளர்ந்துள்ள நிலையில், அதனை ஒருமுகப்படுத்தும் வகையிலும், மேலும் அதனை கூர்மைப்படுத்தும் வகையிலும் சமூகநீதிக்கான எழுச்சி மாநாடுகளை சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் நடத்துவது என்று இந்த ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

* முகநூல், வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சமூகநீதியின் தேவையை புரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொருவரும் நாள்தோறும் நீட் எதிர்ப்புக்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் எளியமுறையில் சிறப்பாக பிரசாரம் செய்வதை முக்கிய கடமையாக கொண்டு செயல்படுமாறும் தீர்மானிக்கப்படுகிறது.

Next Story