அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா


அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 23 Sep 2021 11:00 PM GMT (Updated: 23 Sep 2021 11:00 PM GMT)

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 86-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் மாலை அணிவிக்கிறார்கள்.

தூத்துக்குடி,

பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் இமாலய முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது 86-வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 24-ந்தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

அமைச்சர்-எம்.பி.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது 86-வது பிறந்தநாள் விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

விழாவுக்கு நான் (செந்தில்ராஜ்) தலைமை தாங்குகிறேன். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மகளிர் அணி அமைப்பாளருமான கனிமொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

மேலும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story