தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது அ.தி.மு.க. குற்றச்சாட்டு


தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2021 9:19 PM GMT (Updated: 13 Oct 2021 9:19 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை,

அராஜகத்தின் அத்தியாயம் தி.மு.க. நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய தேர்தல் வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பு வெளியான உடனே, அ.தி.மு.க. இது ஜனநாயக விரோதப்போக்கான அறிவிப்பாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலிலே இருந்தபோது 2 சட்டமன்றத்தேர்தல்கள், 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சித்தேர்தலை தி.மு.க. அரசு 2 கட்டங்களாக நடத்த முயல்கிறது. இதில் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது. 2 கட்டங்களாக தேர்தல் நடந்தால் நியாயமான முறையிலே நடைபெறுவதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்லி அ.தி.மு.க. சென்னை ஐகோர்ட்டில் 1-10-2021 அன்று வழக்கு தொடுத்தது.

தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான தமிழக தலைமை வக்கீல் அ.தி.மு.க. சொன்ன அனைத்து கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் கோர்ட்டு விரிவான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தலை நாங்கள் நடத்துவோம் என்று தமிழக தேர்தல் ஆணையமும் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதையே கொள்கையாக கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. அரசு, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்தபோதிலும் அதை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்த தேர்தலில் மிகப்பெரிய வன்முறை களியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் தி.மு.க. அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் நடத்தியிருக்கக்கூடிய தேர்தல் விதிமீறல்களையும், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது.

வாக்குப்பதிவு நாளன்று பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பிலே தேர்தல் ஆணையத்தில் 9-10-2021 அன்று மனு கொடுத்தோம். அதன் மீதும் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க தவறியிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்பட்ட அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களிலே பழுதடைந்து இருக்கிறது. இது மிகப்பெரிய சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

யாருக்கு காத்திருந்தார்கள்

அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் நாளன்று காலை முதலே பல்வேறு அராஜக நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் ஆங்காங்கே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆளும் தி.மு.க. அரசிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகுதான் தொடங்கி இருக்கிறது. அதற்கான உத்தரவை பெற யாருக்காக காத்திருந்தார்கள் என்பது தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் தெரியும்.

அ.தி.மு.க. முகவர்கள் பல இடங்களிலே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் 4-வது தூணான பத்திரிகையாளர்களே பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கைப்பாவை

இந்த தேர்தலில் பல வன்முறைகளை கட்டவிழ்த்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே முனைப்போடு சட்டத்தை தன் கையிலெடுத்து கொண்டு தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்த தேர்தல்களில் வெற்றிகளை பெற்றிருக்கிறது.

பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மிகவும் தாமதமாக வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தாமதப்படுத்தியிருக்கிறார்கள். பல இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அந்த வெற்றியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்பு காட்டவில்லை. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். பல இடங்களிலே வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள்.

சட்ட விதிமீறல்கள்

ஏற்கனவே அ.தி.மு.க. தாக்கல் செய்த வழக்கில் மீண்டும் இந்த சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் கோர்ட்டில் எடுத்துரைத்து நியாயம் பெற்று இந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்தி காட்டுவோம்.

எந்த நிலை வந்தாலும், இந்த நிலை மாறாது என்று அ.தி.மு.க.வுக்காக உயிரே போனாலும் தேர்தல் என்று வந்தால் ஈரிலைதான் எங்களின் உயிர் மூச்சு என்று தேர்தல் களமாடி தி.மு.க. அராஜக செயலில் ஈடுபடும் என்று தெரிந்தும், வன்முறை செயல்களில் ஈடுபடும் என்று தெரிந்தும், தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றும் என்று தெரிந்தும்; கொண்ட கொள்கைகளில் செயல் மறவர்களாக பணியாற்றி கண் துஞ்சாமல் தேனீக்களை போல சுறுசுறுப்பாக களமாடிய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாக்காளர்களுக்கு நன்றி

அதோடு, தி.மு.க.வுக்கு எங்களுடைய ஓட்டு எந்த காலத்திலும் இல்லை. அவர்கள் எங்களுடைய வாக்குகளை அவர்களாகவே பதிவு செய்து அதிகாரிகளை கையிலெடுத்து தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கி வெற்றி பெற்றாலும் எங்களுடைய உளப்பூர்வமான எம்.ஜி.ஆர். கண்டெடுத்த ஈரிலைக் கழகமாம் அ.தி.மு.க.விற்குத்தான் என்று உறுதிபூண்டு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story