யார் பெரிய ஆள்? என்ற போட்டி: பிரபல ரவுடி வெட்டிக்கொலை 8 பேர் கைது


யார் பெரிய ஆள்? என்ற போட்டி: பிரபல ரவுடி வெட்டிக்கொலை 8 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2021 7:26 PM GMT (Updated: 15 Oct 2021 7:26 PM GMT)

யார் பெரிய ஆள்? என்ற போட்டியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 32). தென்சென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது ஆதம்பாக்கம், கே.கே.நகர், குன்றத்தூர், கொரட்டூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

நாகூர்மீரான் வெளி மாவட்டங்களுக்கு கூலிப்படையாக சென்று பல கொலைகள் செய்ததாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இளைஞர் காங்கிரசில் மாவட்ட நிர்வாகியாக இருந்து வந்தார்.

வெட்டிக்கொலை

ஆதம்பாக்கம் பகுதியில் வசித்த இவர், தற்போது நன்மங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் வசித்து வந்தார். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் உள்ள தனது பெண் நண்பர் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை நாகூர் மீரான் வந்தார்.

அந்த வீட்டின் உள்ளே நாகூர் மீரான், மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது மர்ம கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் அந்த வீ்ட்டுக்குள் புகுந்து நாகூர் மீரானை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் தலை, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்ததால் படுகாயம் அடைந்த நாகூர்மீரான், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆதம்பாக்கம் போலீசார், கொலையான நாகூர் மீரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

8 பேர் கைது

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராபின் (27), அவரது கூட்டாளிகள் இருளா கார்த்திக் (27), பிரபா (23), காணிக்கை ராஜ் (23), கருங்குழி விமல் (23), சீனன் (35), பவுல் (22), சாமுவேல் (23) ஆகியோரை கைது செய்தனர்.

ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த ஒருவரின் வளர்ப்பு மகனான ராபின், தந்தை கொலைக்கு பிறகு ரவுடியாக வலம் வந்தார். இதனால் ராபினுக்கும், கொலையான நாகூர் மீரானுக்கும் இடையே யார் பெரிய ஆள்? என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் ராபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகூர் மீரான வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில் நாகூர் மீரான் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கத்தியுடன் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் குவிந்தனர். அங்கிருந்த ராபின் வீட்டை தீ வைத்து கொளுத்தினார்கள்.

மேலும் ராபினின் கூட்டாளி ஜோசப், பல்லாவரம் சஞ்சய் காந்தி நகரில் வசித்து வருவதால் நாகூர் மீரான் கொலைக்கு பழிவாங்க அவரது கூட்டாளிகள் 8 ேபர் நேற்று காலை ஜோசப் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு ஜோசப் இல்லாததால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜோசப்பின் பெரியம்மா சகாயம்(34) மற்றும் மாமா அந்தோணி(54) ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story