பொதுச்செயலாளர் என்ற பெயரில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்


பொதுச்செயலாளர் என்ற பெயரில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்
x
தினத்தந்தி 19 Oct 2021 11:02 PM GMT (Updated: 19 Oct 2021 11:02 PM GMT)

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் ‘ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வை காப்போம்’ என்று தொண்டர்களுக்கு, சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இன்றைய தொடக்கம், ஒரு இனிய தொடக்கம் ஆகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர் பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நம் கட்சியை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில், எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளை பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால், மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கட்சியை காப்போம், கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்.

ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழ் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணம் என்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள். புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா? மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அ.தி.மு.க. நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோமே... சிந்தியுங்கள்.

காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி

தொண்டர்களே, உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கட்சி காக்கப்படும். மக்கள் ஒற்றுமை உயிர்பெறும். காலத்துக்காக காத்திருப்பவன் ஏமாளி. காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி.

ஜெயலலிதாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகள் அன்றோ... கரம் கோர்ப்போம். அம்பாய் பயணிப்போம். இலக்குகளை தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம். எதிர்காலத்தை நம் கட்சியின் கையில் கொண்டு வர சூளுரைப்போம்.

எம்.ஜி.ஆர். காணாத சோதனையா?

கட்சியின் பாதையில் எம்.ஜி.ஆர். காணாத சோதனையா? ஜெயலலிதா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கட்சியை காத்த காலத்தை நாம் அறிவோம்.

ஜெயலலிதா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம். தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வு இல்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம் சாதிப்போம்.

கட்சி நஞ்சாவதா?

கட்சி நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது... தொடர்வோம் வெற்றி பயணத்தை... தொண்டர்களின் துணையோடும், மக்களின் பேராதரவோடும் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். புரட்சித்தலைவர் நாமம் வாழ்க...புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க... வாழ்க அ.தி.மு.க. வளர்க தமிழகம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கடிதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற அடையாளத்துடன் தனது பெயரை சசிகலா எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story