சமூக வலைதள காதல்: கணவன்,பிள்ளைகளை உதறிய பெண் - காதலன் ஏற்காததால் தூக்குப்போட்டு தற்கொலை


சமூக வலைதள காதல்: கணவன்,பிள்ளைகளை உதறிய பெண் - காதலன் ஏற்காததால் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2021 8:18 AM GMT (Updated: 20 Oct 2021 8:18 AM GMT)

கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கன் (வயது 31). கொத்தனார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (27). இவர்களுக்கு 8 வயதிலும், 6 வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதியை சேர்ந்த முத்துமணி என்பவரின் மகன் விஜய்யுடன் (23) அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரியான விஜய்யுடன் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் காதலானது.

ஐஸ்வர்யா தனக்கு திருமணமானதையும், 2 குழந்தைகள் உள்ளதையும் மறைத்து தன்னைவிட 4 வயது இளையவரான விஜய்யிடம் பழகி வந்துள்ளார். இவ்வாறு 4 ஆண்டுகளாக இவர்களின் காதல் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் விஜய் மீதான காதல் எல்லை மீறி போகவே, தனது 2 பெண் குழந்தைகள், கணவரையும் விட்டுவிட்டு விஜய்யை திருமணம் செய்து செய்து வாழ முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா, ராமநாதபுரம் பஸ்சில் ஏறியுள்ளார். வரும் வழியில் விஜய்யை தொடர்பு கொண்டு, தான் ராமநாதபுரம் வருவதாகவம் தன்னை அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாரத விஜய் அவரை பஸ் நிலையத்துக்கு வந்து அழைத்து சென்றுள்ளார்.

ஏற்கனவே தனது காதல் குறித்து தெரிவித்திருந்ததால் காதல் ஜோடியை சேர்த்து வைக்க விஜய்யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்திருந்தனர். கோவிலில் திருமணம் செய்து வைத்துவிட்டு, அதனை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக ஐஸ்வர்யாவிடம் ஆதார் அட்டையை கேட்டபோது அவர் திகைத்துள்ளார். ஆதார் அட்டையை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா இனியும் மறைக்க முடியாது என்று தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளதை தெரிவித்து, தற்போது விஜய்யுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்த தகவலை கேட்டு விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள விஜய் மறுத்துவிட்டார்.

எனவே ஐஸ்வர்யாவை எல்.கருங்குளம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் தங்க வைத்தனர். ஐஸ்வர்யாவின் கணவர் செல்போன் எண்ணை வாங்கி அவருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போதுதான், அவரை காணவில்லை என்று திருச்செந்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா இங்குதான் உள்ளார், வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதன்படி ரெங்கன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்தார். ஆனால், ஐஸ்வர்யா கணவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேறுவழியின்றி அனைவரும் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கணவன்-மனைவி இருவரையும் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதன்படி போலீசார் நேற்று காலை வருவதாக தெரிவித்ததால் நேற்று முன்தினம் இரவில் பாதுகாப்பாக வைத்திருக்க எண்ணி, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஐஸ்வர்யாவை தங்கவைத்தனர்.

அங்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் கழிப்பறைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஐஸ்வர்யா அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கழிப்பறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வராததால் அங்கு சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதுபற்றிஅறிந்த ராமநாதபுரம் நகர் போலீசார் விரைந்து வந்து, ஐஸ்வர்யா உடலை பிணவறைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மோகனபிரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அதனையும் திருமணமானதையும் மறைத்து சமூக வலைதளத்தில் பழகியவரை நம்பி வந்த இளம்பெண் இறுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் மூழ்கி தேவையற்ற நபர்களுடன் பழகுகிறவர்கள், இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


Next Story