தீபாவளி ஜவுளி எடுக்க மக்கள் கூட்டம்: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


தீபாவளி ஜவுளி எடுக்க மக்கள் கூட்டம்: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Oct 2021 3:44 AM GMT (Updated: 27 Oct 2021 3:44 AM GMT)

தீபாவளி ஜவுளி எடுக்க மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழகத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, கொரோனாவின் தாக்கம் குறைந்துகொண்டே வருவதன் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் எந்த கட்டுப்பாட்டினையும் பின்பற்றாத சூழ்நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது என்பதுதான் யதார்த்த நிலை.

ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் அலைமோதும் கூட்டத்தை பார்க்கும்போது, அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் புத்தாடைகள் வாங்க காலை முதலே பொதுமக்கள் வருகிறார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததையும், அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான கூட்டம் கூடுதலை தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் முககவசம் அணிதல் ஆகியவை பின்பற்றாததையும் காணமுடிகிறது. இதேநிலை தான் பிற மாவட்டங்களிலும் நிலவுகின்றன. இதுபோன்ற நிலைமை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை அதிகரிக்க வழி வகுத்துவிடும்.

கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், இந்த தொற்று முற்றிலும் உலகத்தை விட்டு விரட்டப்படும் வரையில், பாதுகாப்பு முறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டியதும், பண்டிகை காலங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டியதும் மிக மிக அவசியம். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும், கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவும், ஒரே இடத்தில் பலர் கூடுவதை தவிர்க்கவும், பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனாவின் தாக்கம் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் உயராமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story