குற்றவாளிகளுடன் சேர்ந்து குடித்துவிட்டு தகராறு - காசிமேடு போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


குற்றவாளிகளுடன் சேர்ந்து குடித்துவிட்டு தகராறு - காசிமேடு போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 Nov 2021 9:10 PM GMT (Updated: 26 Nov 2021 5:59 AM GMT)

குற்றவாளிகளுடன் சேர்ந்து குடித்துவிட்டு, ரோந்து போலீசாருடன் தகராறு செய்த காசிமேடு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் விமல்குமார். இவரது வீடு வியாசர்பாடியில் உள்ளது. இவர், கடந்த 22-ந்தேதி கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் தொடர்புடைய பெரியமேட்டை சேர்ந்த குற்றவாளிகள் லாரன்ஸ் (வயது 22), சந்தோஷ் (20) ஆகியோருடன் ஆட்டோவில் சென்று கீழ்ப்பாக்கம் பகுதியில் மது அருந்தினார். அங்கு போதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார், அவர்களை எச்சரித்தனர், குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் விமல்குமார் உள்பட 3 பேரும் சேர்ந்து ரோந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். போலீசார் பிடிக்க முயன்ற போது அங்கிருந்து விமல்குமார் தப்பி ஓடிவிட்டார். அவரது நண்பர்கள் மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பணியிடை நீக்கம்

விமல்குமார் தப்பி வரும்போது அவரது செல்போனை அங்கே போட்டு விட்டு ஓடி விட்டார். போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தபோதுதான் விமல்குமார், காசிமேடு போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றுவது தெரியவந்தது.

இதுகுறித்து வடக்கு மண்டல இணை கமிஷனர் துரைக்குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீஸ்காரர் விமல்குமார் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ்காரர் விமல்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Next Story