2021-2022-ம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் ‘பேடிஎம்' நிறுவனத்துக்கு ரூ.1,090 கோடி வருவாய்


2021-2022-ம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் ‘பேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.1,090 கோடி வருவாய்
x
தினத்தந்தி 28 Nov 2021 10:02 PM GMT (Updated: 28 Nov 2021 10:02 PM GMT)

2021-2022-ம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் ‘பேடிஎம்’ நிறுவனம் ரூ.1,090 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

சென்னை,

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் ‘பேடிஎம்’ நிறுவனம் இணையவழி மூலம் சுலபமாக வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.எச். போன்றவற்றை ரீசார்ஜ் செய்யும் வசதி போன்ற பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.

‘பேடிஎம்’ நிறுவனம் இந்த நிதி ஆண்டுக்கான (2021-2022) 2-வது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

ரூ.1,090 கோடி வருவாய்

‘பேடிஎம்’ நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் 64 சதவீத வருவாய் உயர்ந்து ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை, இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதி சேவை மற்றும் இதர வருவாய் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு நிறுவனத்தின் பங்களிப்பு வரம்பு, வருவாயில் 5.7 சதவீதமாக இருந்தது. அது, இந்த ஆண்டு 24 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.

வளர்ச்சி

பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.243.80 கோடியாக உள்ளது.

28 லட்சம் பேர் பயன்

‘இப்போது வாங்குங்கள்...பணத்தை பின்னர் செலுத்துங்கள்' (பை நவ் பே லேட்டர்) என்ற திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை ‘பேடிஎம்’ செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் 2-வது காலாண்டில் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 714 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story