அ.தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்


அ.தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்
x
தினத்தந்தி 1 Dec 2021 5:54 AM GMT (Updated: 1 Dec 2021 7:29 AM GMT)

அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது.

சென்னை,

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று கூடியது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம்  தொடங்கியது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.  மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது.

அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களுக்கு காலமானார். இதையடுத்து அந்த பதவி காலியாக இருந்தது.

அண்மையில் அ.தி.மு.க சிறுபான்மையினர் அணி நிர்வாகி ஜே.எம்.பஷீரை கட்சியிலிருந்து  தலைமை நீக்கியது இப்போது அன்வர் ராஜா நீக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.விலிருந்து வரிசையாக  நீக்கப்படுவது கடும் சர்ச்சையை கிளப்பி  வந்தது. இதை தொடர்ந்து  இன்று நடைபெற்ற  செயற்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன்  தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Next Story