நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 12 Dec 2021 8:03 PM GMT (Updated: 12 Dec 2021 8:03 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

தூத்துக்குடி,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு காலை 11 மணிக்கு செல்கிறார். தொடர்ந்து அவர் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்துக்கு சென்று, பாரதியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகை செல்லும் அவர் அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பார்க்கிறார்.

நாளை

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு வருகிறார்.

அதன்பிறகு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். மாலையில் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பணிகள் குறித்து கவர்னருக்கு எடுத்துக் கூறுகிறார். மேலும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.

பட்டமளிப்பு விழா

நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை நெல்லையப்பர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

மதியம் 2.30 மணிக்கு நெல்லையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story