பேருந்து பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டால் மோட்டல்களின் உரிமம் ரத்து; அமைச்சர் எச்சரிக்கை


பேருந்து பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டால் மோட்டல்களின் உரிமம் ரத்து; அமைச்சர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2021 1:45 PM GMT (Updated: 20 Dec 2021 1:45 PM GMT)

பேருந்து பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டால் மோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சென்னை,

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்களில் தரமற்ற உணவு பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், டெண்டர் பெறப்பட்ட மோட்டல்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த முடியும்.  சாலையோர மோட்டல்களில் உணவின் தரம், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் பற்றி புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி அது உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

டெண்டர் எடுத்திருந்தபோதிலும், பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டால் மோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதேபோன்று, மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுபற்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு பேருந்துகள் பற்றிய தகவல்களுக்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.  கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில் மாநகர பேருந்துகள் 24 மணிநேரம் இயக்கப்பட உள்ளன.


Next Story