ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றியது ரத்து: அ.தி.மு.க.வின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு


ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றியது ரத்து: அ.தி.மு.க.வின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 6:59 PM GMT (Updated: 20 Dec 2021 6:59 PM GMT)

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்து தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றி அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.சேஷசாயி, அந்த அரசாணைகளை ரத்து செய்து கடந்த மாதம் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து, வழக்கில் தொடர்பில்லாத 3-ம் நபரான அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதற்கு ஐகோர்ட்டும் அனுமதி வழங்கியது.

சட்டவிரோதம் இல்லை

இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அ.தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நினைவு இல்லம் அமைப்பது பொது பயன்பாடா, இல்லையா என்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய முடியும். வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை.

கொள்கை முடிவு

பல முறை முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா, பெண்கள் நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதை அடுத்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் வகையிலும் நினைவு இல்லம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்தது.

மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி செலவில், நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நினைவு இல்லம் அமைக்க தேவையில்லை என்று தனி நீதிபதி கூற முடியாது. ராஜாஜி, காமராஜர் ஆகியோருக்கு சென்னையில் இரு நினைவிடங்கள் உள்ளன.

சாவியை கொடுத்து விட்டார்

வேதா நிலையத்தின் சாவிகள் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால், அ.தி.மு.க.வின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூற முடியாது.

இந்த மேல்முறையீடு குறித்து சென்னை கலெக்டரிடம் விவரம் கூறிய பின்னரும், அவர் சாவியை கொடுத்து விட்டார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், முந்தைய அரசின் முடிவு செல்லாது என்று கூற முடியாது. எனவே, தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்று போதும்

தீபக் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘தமிழக அரசு, மேல் முறையீடு செய்யாமல், தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று, சாவியை ஒப்படைத்துள்ளது. தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக முன்பு சேராத அ.தி.மு.க., இப்போது மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை. ஏற்கனவே, மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு நினைவு இல்லத்தை மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்ய தேவையில்லை. ஒரு நினைவகம் போதுமானது’’ என்று வாதிட்டார்.

தீபா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், ‘‘வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தியதில் தீவிர நடைமுறை தவறு உள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்ய அ.தி.மு.க.வுக்கு அடிப்படை உரிமையும் இல்லை. வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் எந்த பொது பயன்பாடும் இல்லை’’ என்று வாதிட்டார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு, ஜெயலலிதாவின் சொத்தை அரசுடமை ஆக்க முடியாது. அந்த வீட்டை முதல்-அமைச்சர் அலுவலகமாக மாற்றலாம் என்று தீர்ப்பு அளித்தது.

ஒரு நினைவிடம் உள்ள நிலையில், மற்றொரு நினைவு இல்லம் தேவையில்லை என தனி நீதிபதி உத்தரவு சரியானது. இந்த தீர்ப்பின்படி, வாரிசுகளிடம் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டதால், இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது’’ என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Next Story