சென்னை வானிலை மைய செயல்பாட்டை மேம்படுத்த மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் கடிதம்


சென்னை வானிலை மைய செயல்பாட்டை மேம்படுத்த மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 1 Jan 2022 6:34 AM GMT (Updated: 1 Jan 2022 6:34 AM GMT)

சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை கோரி மத்திய உள்துறை மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.





சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.  நடப்பு ஆண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.  இந்நிலையில், சென்னையில் கடந்த டிசம்பர் 30ந்தேதி காலையில் திடீரென சாரல் மழை பெய்தது.  இதன்பின்னர், பல மணிநேரம் தொடர் கனமழை பெய்தது.  இதன்படி, சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி, தி.நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வளசரவாக்கம், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை புறநகரிலும் மழை பெய்துள்ளது.  இதுதவிர, கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.  திடீரென பெய்த கனமழையால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

இதனால், பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து காணப்பட்டது.  தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் கொண்டு வெளியேற்றப்படுகிறது.  இதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது.  இதேபோன்று, சென்னையில், நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைக்குறிப்பிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தினை மேம்படுத்திட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் சுருக்கம் பின்வருமாறு:

அந்த கடிதத்தில், பெருமழைக்கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சார்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது.

ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாதநிலை உள்ளதை காண்கிறோம். உதாரணமாக 30-12-2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து அதே சமயம் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

இதன்பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், மிக கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மதியம் முதல் இரவு வரை பெய்தது. மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பலபகுதிகள் மூழ்கி அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் ஏற்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்த நிகழ்வுகள் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற “ரெட் அலர்ட்” சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story