பறக்கும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ.1¼ லட்சம் கொள்ளை


பறக்கும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ.1¼ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 4 Jan 2022 12:16 AM GMT (Updated: 4 Jan 2022 12:16 AM GMT)

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர்.

உடனே அங்கு வந்த ரெயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரெயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.

துப்பாக்கி முனையில்...

விசாரணையில் தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, சென்னை மண்டல எஸ்.பி. அதிவீரபாண்டியன், சென்னை ரெயில்வே கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில்குமரேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சம்பவம் நடந்த இடம், ரெயில் நிலைய நடைமேடைகளை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘தனது பெயர் சீக்காராம் மீனா (வயது 28) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ரூ.1¼ லட்சம் கொள்ளை

அதிகாலை 4.10 மணிக்கு முதல் ரெயில் என்பதால் நான் அதிகாலை 3.50 மணிக்கே டிக்கெட் கவுண்ட்டரை திறந்துவிடுவேன். இன்றும் (நேற்று) வழக்கம்போல டிக்கெட் கவுண்ட்டரை திறப்பதற்காக பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தேன். திடீரென என் பின்னால் வந்த முகமூடி அணிந்த 3 பேர், என்னை பிடித்து டிக்கெட் கவுண்ட்டர் அறைக்குள் தள்ளினார்கள். நான் சுதாரிப்பதற்குள், அதில் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, சத்தம் போட்டால் சுட்டு விடுவேன் என மிரட்டினார்.

அதனால் நான் உயிர் பயத்தில் சத்தம் போடவில்லை. பின்னர் 3 பேரும் சேர்ந்து என்னை கட்டிப்போட்டு, வாயில் துணியை திணித்துவிட்டு, டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, கதவையும் வெளிபக்கமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

4 தனிப்படைகள்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட திருவான்மியூர் ரெயில்வே போலீசார், இதுபற்றி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளையர்களின் கைரேகை கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த இடத்தில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. கொள்ளையர்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்களா? அல்லது அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களா? அல்லது ரெயில்வே ஊழியர்களே திட்டமிட்டு கொள்ளையடித்து நாடகமாடுகிறார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடிக்கி விட்டுள்ளோம். விரைவில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story