பிளஸ் 2 மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகை வாலிபர் அதிரடி கைது


பிளஸ் 2 மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகை வாலிபர் அதிரடி கைது
x
தினத்தந்தி 11 Jan 2022 4:37 PM GMT (Updated: 11 Jan 2022 4:37 PM GMT)

பிளஸ்-2 மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகை வாலிபரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வில்லியனூர்
பிளஸ்-2 மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகை வாலிபரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆபாச படம் எடுத்து மிரட்டல்

புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் ஆன்லைன் வழியில் படிப்பதற்காக  வீட்டில் வாங்கி கொடுத்த செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் முகம் தெரியாத நபர்களிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. 
அப்போது நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது வீடியோ காலில் ஆபாசமாக காட்ட சொல்லி அந்த வாலிபர், அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
அந்த ஆபாச வீடியோவை தனது நண்பருக்கும் அந்த வாலிபர் அனுப்பினார். அந்த நண்பரும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு ஊட்டிக்கு வருமாறு அழைத்துள்ளார். இல்லையெனில் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக இருவரும் மிரட்டினர்.

2 பேருக்கு வலைவீச்சு

அவர்களது மிரட்டலுக்கு பயந்த அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி ஊட்டிக்கு புறப்பட்டுச் செல்ல தயாரானார். இதையறிந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது, அவர் நடந்த விவரத்தை கூறி கதறி அழுதார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியிடம் செல்போனில் பேசிய மிரட்டிய 2 பேரின் புகைப்படங்களை கைப்பற்றினர்.

இரவோடு இரவாக...

மேலும் அவர்களின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடி வந்தனர். அப்போது அவர்கள் நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று  நாகை சென்று, 2 பேரில் ஒருவரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை இரவோடு இரவாக அதிரடியாக கைது செய்து, நேற்று புதுவை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மாணவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த மற்றொரு வாலிபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Next Story