105-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி அ.தி.மு.க.வினர் மரியாதை


105-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி அ.தி.மு.க.வினர் மரியாதை
x
தினத்தந்தி 13 Jan 2022 6:58 PM GMT (Updated: 13 Jan 2022 6:58 PM GMT)

105-வது பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர். சிலைக்கு வரும் 17-ந்தேதி (திங்கட்கிழமை) அ.தி. மு.க.வினர் மரியாதை செலுத்த இருக்கின்றனர். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை

அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆருடைய உருவச் சிலைக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட நிகழ்ச்சிகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளான 17-1-2022 அன்று, எம்.ஜி.ஆருடைய நினைவுகளை எப்பொழுதும் நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆருடைய உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு

இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி, அந்தமான் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17-1-2022 அன்று ஆங்காங்கே எம்.ஜி.ஆர். உருவச்சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்வதோடு, மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story