டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு


டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 11:52 PM GMT (Updated: 17 Jan 2022 11:52 PM GMT)

டெல்லி குடியரசு தினவிழா அணி வகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

டெல்லியில் குடியரசு தின விழா 26-ந் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இதையொட்டி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

தமிழக அலங்கார ஊர்தி

இந்திய ராணுவத்தின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, ராணுவ தளவாடங்களில் அணிவகுப்பு நடைபெறும். அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும்.

இந்த ஆண்டு மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்,

தற்போது தமிழக அலங்கார ஊர்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்த நிலையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பில், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களைக் கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லியில் 26-ந் தேதியன்று நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, தமிழ்நாட்டிடம் இருந்து பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்.

இந்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று, இந்தியாவின் சுதந்திர போராட்டம் - 75, சாதனைகள் - 75, நடவடிக்கைகள் - 75, தீர்வுகள் - 75 என்ற மையக் கருத்துடன் அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் மையக்கரு

இதில், தமிழகத்தின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை முன்னிருத்தி, ‘சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாடு’ என்ற மையக்கருவுடன் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசு அதற்கான வடிவமைப்புகளை மாநில அரசு சமர்ப்பித்திருந்தது.

இதற்காக நிபுணர் குழுவின் முன்பு மாநில அரசின் பிரதிநிதிகள், அவற்றை தேர்வு செய்வதற்காக 3 முறை ஆஜரானார்கள். முதல் கூட்டத்தில், தமிழகத்தின் மையக்கருவின் மீது திருப்தியை நிபுணர் குழு தெரிவித்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் போராடிய தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் சித்தரிப்பை ஊர்தியின் முன்பகுதியிலும், கிழக்கிந்திய கம்பெனி காலகட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் சித்தரிப்பை ஊர்தியின் பின்பகுதியிலும் வைத்து வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஊர்தியின் முன்னால்...

அலங்கார ஊர்தியின் முன்புறம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1906-ம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கி, தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பற்றிய சித்தரிப்பு அதில் இடம் பெற்றிருந்தது.

மக்களின் மனதில் சுதந்திர போராட்ட உணர்வுகளை தூண்டி, தட்டி எழுப்பும் வகையில் தேசப்பற்றுப் பாடல்களை எழுதிய மகாகவி சுப்ரமணிய பாரதியார், அந்த வடிவமைப்பில் இடம் பெற்றிருந்தார்.

ஊர்தியின் பின்னால்....

அலங்கார ஊர்தியின் பின்புறம், குதிரையில் வாளை ஏந்திச் செல்லும் ராணி வேலு நாச்சியார் மற்றும் பெண் படை வீராங்கனைகளின் சிலை வடிவம் இடம் பெற்றுள்ளது. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக சண்டையிட்ட வீரப் பெண் அவர். சிவகங்கை பகுதியில் 1780-1790-ம் ஆண்டுகளில் ராணியாக இருந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுதக் கிடங்கை தற்கொலைப்படை தாக்குதலை ஏற்பாடு செய்து அழித்தார். அவருக்கு மருதுபாண்டிய சகோதரர்கள் பாதுகாப்பாக இருந்து, கிழக்கிந்திய கம்பெனியை போரில் வெற்றி கொள்ளவும், சிவகங்கை சீமையை வென்றெடுக்கவும் உதவி செய்தனர். அவர்களின் படங்களையும் பதாகையில் இணைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

காயப்பட்ட உணர்வு

தமிழகத்தில் உள்ள பல சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார், பாரதியார். வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரும் விளங்குகிறார்கள். எனவே அவர்களின் சித்தரிப்புகளைக் கொண்ட அலங்கார ஊர்தி விலக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் உணர்வுகளையும், தேசபக்தி உணர்வையும் கடுமையாக காயப்படுத்துவதாக உள்ளது.

ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக, குழு உறுப்பினர்களின் ஆலோசனையின்படி மாற்றி அளிக்கப்பட்ட 7 வடிவமைப்புகளையும், குழு நிராகரித்திருப்பதை ஏற்க முடியாது. 4-வது கூட்டத்திற்கு தமிழகம் அழைக்கப்படவில்லை என்பதோடு, அணிவகுப்பில் பங்கேற்போர் பட்டியலில் தமிழகம் விடப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற நடவடிக்கை

இது தமிழகத்திற்கும் அதன் மக்களுக்கும் மிகுந்த கவலையை அளிப்பதால், நீங்கள் உடனடியாக தலையிட்டு, டெல்லியில் நடக்கும் குடியரசுத் தின நிகழ்ச்சியில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியை, சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story