சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Jan 2022 9:22 PM GMT (Updated: 18 Jan 2022 9:22 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த 1 கிலோ 62 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 2 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

1 கிலோ தங்கம்

அதில் சிறிய அளவிலான 2 மின்சாதன கருவிகள் இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அவை கனமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர்.

அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. 2 பேரிடம் இருந்தும் ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 62 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story