28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தமிழகத்தில் 905 குழந்தைகள் பாதிப்பு


28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தமிழகத்தில் 905 குழந்தைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 10:10 PM GMT (Updated: 20 Jan 2022 10:10 PM GMT)

தமிழகத்தில் நேற்று 905 குழந்தைகள் உட்பட 28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16,234 ஆண்கள், 12,327 பெண்கள் என மொத்தம் 28 ஆயிரத்து 561 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,520 பேரும், கோவையில் 3,390 பேரும், செங்கல்பட்டில் 2,196 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக சிவகங்கையில் 138 பேரும், பெரம்பலூரில் 123 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் உட்பட 12 வயதுக்குட்பட்ட 905 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4,064 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்பத்திரி சிகிச்சையில்...

தமிழகத்தில் இதுவரை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 14 ஆயிரத்து 296 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 40 ஆயிரத்து 479 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 284 பேர் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 380 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 1,032 தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

39 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 20 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 19 பேரும் என 39 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கோவை, ஈரோடு, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, தஞ்சாவூரில் தலா இருவரும், நாமக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விருதுநகரில் தலா ஒருவரும் என 12 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 112 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

1,79,205 பேருக்கு சிகிச்சை

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19 ஆயிரத்து 978 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,011 பேரும், செங்கல்பட்டில் 1,952 பேரும், கோவையில் 1,189 பேரும் அடங்குவர்.

இதுவரையில் 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 பேர் குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 1 லட்சத்து 79 ஆயிரத்து 205 பேர் குணமடையாமல் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story