குடும்ப தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்


குடும்ப தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 11 May 2022 9:16 PM GMT (Updated: 11 May 2022 9:16 PM GMT)

மாதவரத்தில் குடும்ப தகராறில் முதியவரை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 80). இவருடைய மனைவி பாச்சுபாய் (75). இவர்களுக்கு சிவக்குமார் (49), நரேந்திர குமார் (47), செந்தில்குமார் (42), செல்வகுமார் (40) ஆகிய 4 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சிவக்குமார் திருமணமாகி அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மற்றவர்களுக்கும் திருமணமாகி ஒருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் திருச்சியிலும் வசித்து வருகிறார். இதில் இளைய மகன் செல்வக்குமார் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவில் குடும்பத்தை விட்டு வந்த மூத்த மகன் சிவகுமார் தாய் தந்தையுடன் இங்கேயே தங்கி விட்டார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி தந்தை பாலசுப்ரமணியத்திற்கும் மூத்த மகன் சிவகுமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

கொலை வழக்காக மாற்றம்

இந்த தகராறு முற்றவே, சிவக்குமார் தந்தையை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் பாலசுப்பிரமணியத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 8-ந் தேதி இறந்து விட்டார்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று பிரேத அறிக்கை வந்ததில் மகன் அடித்து தள்ளியதில் தான் பாலசுப்பிரமணியன் இறந்தார் எனபது உறுதியானது. இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மகன் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story