மின்சார ரெயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு...!


மின்சார ரெயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு...!
x
தினத்தந்தி 13 May 2022 5:17 AM GMT (Updated: 13 May 2022 5:17 AM GMT)

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மின்சார ரெயில் மீது ஏறி நடந்து கொண்டிருப்பதாக அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அவரைக் கீழே இறங்குமாறு கூறியபோது, அதை ஏற்க மறுத்து அந்த நபர் தற்கொலைக்கு முயற்சித்தார். சுதாரித்துக்கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார்  ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் மின்சார ரெயிலின் உயரழுத்த மின்சாரத்தை நிறுத்தினர். 

பின்னர், அந்த நபர் ரெயிலின் கூரை மீது  ஓடத் தொடங்கினார். உடனே அங்கு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர் மூவர் அந்த நபருக்கு தெரியாமல் மேலே ஏறி அவரை பிடிக்க முயற்சித்த போது அவர் கீழே குதித்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். 

சுதாரித்து கொண்ட ரெயில்வே போலீசார் மேலே இருந்த அந்த நபரை பத்திரமாக பிடித்து கீழே இறக்கினர். சுமார் 3 மணி நேரம் போராடி அந்த நபரை மீட்ட ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். 

பின்னர் அவரிடம் இருந்த பையை சோதித்த போலீசார், அதில் சில ஆவணங்கள் இருந்ததில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீ புத்தூர் பகுதியை சார்ந்த இளங்கோவன்(வயது 68), என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தாரா என அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால்  அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story