பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி பணம் திருட்டு - சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல்


பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி பணம் திருட்டு - சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல்
x

ஒரு வருடத்தில் 288 கோடிக்கும் அதிகமான பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து சுருட்டப்பட்டு இருக்கிறது.

சென்னை,

ஆன்லைன் மூலமாக பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டில் நூதன முறையில் பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி பணம் திருடப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி ஒரு வருடத்தில் 288 கோடிக்கும் அதிகமான பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து சுருட்டப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் புகாரின் அடிப்படையில் 106 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.ரூ.27 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.67 கோடி ரூபாய் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது.

இதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி பணம் 3 மாதத்தில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது.

இதன்படி 27 ஆயிரத்து 905 சிம் கார்டுகள் தடைசெய்ய மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 240 சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை கண்டு கொள்ளாமல் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story