சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 29 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 29 பேர் காயம்
x

செம்பட்டிவிடுதி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

ஆலங்குடி அடுத்துள்ள செம்பட்டிவிடுதி அருகே நெறிஞ்சிப்பட்டியில் பாலையடி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பசுமைதேசம் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க அதனை வீரர்கள் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், முத்துராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி, மண்டல துணை தாசில்தார் கவியரசு, வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

29 பேர் காயம்

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 552 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், மின் விசிறி, குக்கர், கிரைண்டர், ரொக்கம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு பிரிட்ஜ், சிறந்த காளைக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் வந்து கண்டு களித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்றுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. செம்பட்டிவிடுதி (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story