கொத்தனாரை கொன்ற வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது


கொத்தனாரை கொன்ற வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது
x

கரூர் அருகே கொத்தனாரை கொன்ற வழக்கில் கூலி பணத்தை தராததால் தீர்த்து கட்டியதாக கைதான சிறுவன் உள்பட 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கரூர்

கொத்தனார் கொலை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை தெற்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35). கொத்தனார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது, திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் பெரியகளத்துப்பட்டி வளைவு பகுதியில் மோகன்ராஜை வழிமறித்த 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை தேடி வந்தனர்.

வாக்குமூலம்

இந்தநிலையில் மோகன்ராஜ் கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் போசம்பட்டி கிராமம் கீரிக்கல்மேடு பகுதியை சேர்ந்த கிஷோர் (19), கரூர் மாவட்டம் நச்சலூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (20), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்து தோகைமலை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

மோகன்ராஜ், கிஷோர், ஜீவா, 17 சிறுவன் ஆகிய 4 பேரும் சிவகிரியில் ஒன்றாக வேலை செய்து உள்ளனர். இதில் வேலை பார்த்த வகையில் கூலி பணத்தை மோகன்ராஜ் 3 பேருக்கும் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து 3 பேரும் அவரிடம் பலமுறை கேட்டும் தரவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிஷோர், ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று நள்ளிரவு மோகன்ராஜை செல்போனில் அழைத்து வரவழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

3 பேர் கைது

பின்னர் கிஷோர், ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் தோகைமலை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 17 வயது சிறுவனை திருச்சி சிறுவர் சீர்திருத்தபள்ளியிலும், கிஷோர், ஜீவா ஆகியோரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story