இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வருகை


இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வருகை
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 23 Jan 2023 6:47 PM GMT)

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வந்தனர்.

மேலும் 5 அகதிகள் வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு படகில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அகதிகளாக வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் மேலும் 5 பேர், ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் வந்து இறங்கி உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு விரைந்து சென்ற கடலோர போலீசார், சேரான்கோட்டை கடற்கரையில் வந்திறங்கிய 3 ஆண்கள், ஒரு மூதாட்டி மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 5 பேரை வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அகதிகளிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பாரதிதாசன் (வயது 40), இவருடைய தாயார் முனியம்மாள் (75) மற்றும் பாரதிதாசனின் 2 மகன்கள், மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் என தெரியவந்தது..

போலீசார் நடத்திய விசாரணையின்போது பாரதிதாசன் கூறியதாவது:-

இலங்கை கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வந்தேன். இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உச்சக்கட்ட போர் நடந்தபோது கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்தோம். அங்குள்ள முகாமில் பல ஆண்டுகள் தங்க வைக்கப்பட்டு இருந்ேதாம்.

ரூ.4 லட்சம் கொடுத்தேன்

என் மனைவி கடந்த 9 மாதத்திற்கு முன்பு குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்றுவிட்டார். எனவே எனது 2 மகன்கள் மற்றும் பெண் குழந்தை, தாயாருடன் வசித்து வந்தேன். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை. வேலையும் சரியாக கிடைக்கவில்லை. எனவே குழந்தைகளை காப்பாற்ற தமிழகம் வர திட்டமிட்டேன். அதனால் கிளிநொச்சியில் எனது இடத்தை விற்று, அதில் கிடைத்த ரூ.4 லட்சத்தை படகோட்டிகளிடம் கொடுத்து பேசாலையில் இருந்து பிளாஸ்டிக் படகில் புறப்பட்டு ராமேசுவரம் கடற்கரையில் வந்து இறங்கினோம். எங்களை இறக்கி விட்டுவிட்டு படகோட்டிகள் இலங்கையை நோக்கி சென்றுவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகதி முகாமில் ஒப்படைப்பு

விசாரணைக்கு பின்னர் 5 பேரும், மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று வந்த 5 பேருடன் சேர்த்து, கடந்த சில மாதங்களில் 70 குடும்பங்களை சேர்ந்த 79 ஆண்கள், 69 பெண்கள், 39 ஆண் குழந்தைகள், 34 பெண் குழந்தைகள் என மொத்தம் 221 பேர் அகதிகளாக தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story