மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்


மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற சிவகாசி தாலுகாவில் மட்டும் 75 ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

சிவகாசி,

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற சிவகாசி தாலுகாவில் மட்டும் 75 ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உரிமைத்தொகை

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிதிஉதவி வருகிற செம்படம்பர் மாதம் 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சிவகாசி தாலுகாவில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 357 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களின் 84,659 ரேஷன் கார்டுதாரர்கள் கிராமப்புறங்களில் வசித்து வரு கிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டது. இதில் 62,500 பேர் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர்.

12,500 பேர்

இதேபோல் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 35 ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் 35,696 பேருக்கு கடந்த 5-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

விண்ணப்பங்களை பெற்ற பெண்கள் அதனை பூர்த்தி செய்து தற்போது சிறப்பு முகாம்களில் வழங்கி வருகிறார்கள். கடந்த 3 நாட்களில் மட்டும் 12,500 பேர் தங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர்.

இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கிடையில் சிவகாசி மருதுபாண்டியர் தெருவில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு வந்த தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் விண்ணபங்களை கொண்டு வந்த பெண்களிடம் அரசு கேட்டுள்ள ஆதாரங்களை கொடுத்து உரிமை தொகை பெற தகுதியை உறுதி செய்துகொள்ள வலியுறுத்தினார். அப்போது செயற்குழு உறுப்பினர் அதிவீரன்பட்டி செல்வம், பகுதி செயலாளர் காளிராஜன், மாரீஸ்வரன், கவுன்சிலர் சேதுராமன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story