குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7,526 பேர் கைது


குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7,526 பேர் கைது
x

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7,526 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி:

திருச்சி மாநகரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடந்த 5 மாதத்தில் 7,526 பேர் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்கள் என்று 2020-ம் ஆண்டு 40 பேரும், 2021-ம் ஆண்டு 85 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கடந்த 5 மாதங்களில் மட்டும் 78 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த 64 பேரும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 405 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பொது அமைதியை பேணிக்காப்பதற்காக, நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 419 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 15 ரவுடிகள் உள்பட 20 பேர் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 5,638 பேர் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story