சாராயம் விற்ற, கடத்திய 87 பேர் கைது


சாராயம் விற்ற, கடத்திய 87 பேர் கைது
x

வேலூர் மாவட்டத்தில் 20 நாட்களில் சாராயம் விற்ற, கடத்திய 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 ரவுடிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 20 நாட்களில் சாராயம் விற்ற, கடத்திய 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 ரவுடிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனை

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தல், சாராயம் விற்பனை, காட்டன் சூதாட்டம், ரவுடியிசத்தை ஒழிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 20 நாட்கள் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.

இதில் கஞ்சா விற்ற, கடத்தியது தொடர்பாக 22 வழக்குகளில் 29 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 27 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 1½ கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சாராயம் விற்ற 87 பேர் கைது

சாராய வேட்டையில் 142 வழக்குகள் பதிவு செய்து, அதில் தொடர்புடைய 87 பேர் கைது செய்யப்பட்டனர். 2,808 லிட்டர் சாராயம், 14,850 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன. சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குண்டர் சட்டத்தில் ஒருவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். லாட்டரி விற்பனை மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைதாகி உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ரவுடியிசத்தை ஒழிக்க 144 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 92 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவர்களிடம் பிணையப்பத்திரம் பெற்று தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 39 ரவுடிகள் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story