வேன் கவிழ்ந்து 9 பேர் காயம்
நாமகிரிப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 9 பேர் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்
எருமப்பட்டி அருகே உள்ள பவுத்திரம் பகுதியை சேர்ந்த 19 பேர் சேலம் மாவட்டம் ஆரளூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு சுற்றுலா வேனில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நேற்று அதிகாலை 2 மணி அளவில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்தபோது வேனின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் வேன் கவிழ்ந்து வேனில் பயணம் செய்த ராஜா (வயது 30), ராமராஜ் (26), கண்மணி (32) ரஞ்சிதம் (35), லட்சுமி (40), பெரியண்ணன் (50), லட்சுமி (50), செல்வராணி (35), ஜெயசீலன் (42) ஆகிய 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் அவர்கள் வீடு திரும்பினர். வேனில் வந்த மற்ற 10 பேர் காயம் இன்றி தப்பினர். இதுபற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.