குமரியில் சாரல் மழை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 934 கனஅடி நீர் வெளியேற்றம்


குமரியில் சாரல் மழை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 934 கனஅடி நீர் வெளியேற்றம்
x

குமரியில் சாரல் மழை பெய்வதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 934 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் சாரல் மழை பெய்வதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 934 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இதேபோல் மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 424 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 584 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் வரத்தும், அணைகளில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளன. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 4.6 கன அடி தண்ணீர் வந்தது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்பட்டது.


Next Story