பழையகாக்கையாடியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்


பழையகாக்கையாடியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்
x

பழையகாக்கையாடியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே பழையகாக்கையாடியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த தடுப்பணை

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி தண்ணீர்குன்னத்தில் அதிவீரராமன் ஆறு செல்கிறது. இந்த அதிவீரராமன் ஆற்றில் பழையகாக்கையாடி என்ற இடத்தில் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக அதிவீரராமன் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் பாசன வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று அந்த பகுதி விவசாயிகள் நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்து இடிந்து விழுந்து ஆற்றின் பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

விவசாயிகள் சிரமம்

இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்றது. ஆனாலும் தடுப்பணை இடிந்து விழுந்த இடத்தில் மரங்களை கட்டி வைத்து தண்ணீரை தேக்கி வைக்க அந்த பகுதி விவசாயிகள் முயன்றனர். ஆனால் மரங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகள் தடுப்பணை சேதமடைந்ததால் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. அதனால் பாசன வாய்க்கால்கள் மூலம் போதிய அளவில் தண்ணீர் செல்லாததால் பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி பூதமங்கலம் பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளைநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும்

போதிய அளவில் தண்ணீர் செல்லாததால், பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது. ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட பம்புசெட் வைத்து பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த தடுப்பணை இருந்த இடத்தில் புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story