போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் இடிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி
ஒட்டன்சத்திரம் அருகே சேதமடைந்த தண்ணீர் தொட்டி இடிக்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டி சாலையில் இருந்து அகற்றப்படாததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லக்குண்டாபுரத்தில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் கள்ளிமந்தையம் சாலையோரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று இருந்தது. அந்த தொட்டி சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் ஆபத்து ஏற்படும் முன்பு தண்ணீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டி அங்கிருந்து அகற்றப்படவில்லை. மாறாக சாலையில் அந்த தொட்டி போடப்பட்டிருந்தது. இதனால் வல்லக்குண்டாபுரம்-கள்ளிமந்தையம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலையில் கிடக்கும் தொட்டியால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் தொட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.