வனவிலங்குகளின் புகலிடமான பாழடைந்த கட்டிடம்


வனவிலங்குகளின் புகலிடமான பாழடைந்த கட்டிடம்
x
தினத்தந்தி 27 July 2023 8:00 PM GMT (Updated: 27 July 2023 8:00 PM GMT)

வால்பாறையில் வனவிலங்குகளின் புகலிடமான பாழடைந்த கட்டிடத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் வனவிலங்குகளின் புகலிடமான பாழடைந்த கட்டிடத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டாக்டர் குடியிருப்பு

வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டருக்கான குடியிருப்பு, அதன் வளாகத்தில் உள்ளது.

ஆரம்ப காலத்தில் முழு நேர டாக்டர் பணியில் இருந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மேலும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்த துணை கால்நடை மையங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வந்தார்.

இதன் காரணமாக ஆஸ்பத்திரியும், குடியிருப்பும் முறையான பராமரிப்பில் இருந்தது. அதன்பிறகு நிரந்தர டாக்டர் நியமிக்கப்படவில்லை. அவ்வப்போது வெளியூரில் இருந்து டாக்டர் வந்து பணியாற்றி செல்கிறார். இதனால் அங்குள்ள குடியிருப்பு முறையான பராமரிப்பு இல்லாமல் போய்விட்டது.

பாழடைந்தது

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு நிரந்தர டாக்டர் நியமிக்கப்பட்டார். ஆனால் பராமரிப்பு இல்லாமல் கிடந்த குடியிருப்பு, அதற்குள் பாழடைந்து போய்விட்டது. இதனால் அந்த குடியிருப்பை அவர் பயன்படுத்த முடியாத ஏற்பட்டு உள்ளது.

இதன் உண்டு உறைவிடப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் குடியிருப்பு, அரசு கல்லூரியின் மாணவிகள் விடுதி மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ளன.

வனவிலங்குகள்

இந்த நிலையில் பாழடைந்த அந்த டாக்டர் குடியிருப்பில் சமூக விரோத செயல்கள் அரங்ேகறுகிறது. மேலும் காட்டுப்பன்றிகள், பாம்புகள், சிறுத்தைப்புலிகள் பதுங்கி வருகின்றன. அதில் சிறுத்தைப்புலிகள் ெபாதுமக்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு பிராணிகளை கவ்வி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வனவிலங்குகளின் புகலிடமான அந்த பகுதியில் குழந்தைகளை வெளியே நடமாட விடவே அச்சமாக உள்ளது. எப்போது பாம்பு வரும், சிறுத்தைப்புலி வரும் என்று பயத்திலேயே இருக்க வேண்டி உள்ளது. அந்த டாக்டர் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினால் மட்டும்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு பதிலாக புதிய குடியிருப்பு கட்டி கொடுக்கலாம் என்றனர்.


Next Story